திங்கள், 29 ஜூன், 2009

கண்ணீர்த்துளி


கண்மூடி துயரத்தில் நீ!
கண்களில் நீர்வழிய நான்!
கூடித்திரிந்த வீதிகளும்,
வெறிச்சோடிக் கிடக்குதடி,
பாடிப்பறந்த சோலைகளும், நாம்
படித்த பள்ளிச்சாலைகளும் உன்
வரவு தேடி ஏங்குதடி,
பிரிவை எண்ணி வாடுதடி!

இறைவனுக்கு இதயமில்லையா?
இயற்கைக்கும் இரக்கமில்லையா?
வாழவேண்டிய உன்னை,
வாட்டுவதும் ஏனோ!

மணமகளாய் கனவு கண்டேனே!
மரணப்படுக்கையில் கண்டு நொந்தேனே!

நெஞ்சம் பதறுதடி,
நினைக்கவே கலங்குதடி!

என்னுயிர்த்தோழியே,
என் இதய ராணியே,
உடன்பிறந்தாள் போல,
உள்ளத்தை கவர்ந்தவளே!
எப்படியடி மறப்பேன் உன்னை?
மீண்டும் பழையபடி என்று நான்
காண்பேன் உன்னை ?

அதிசயங்கள் உண்மையென்றால்,
ஆண்டவனும் உண்மையென்றால்,
அற்புதங்கள் நிகழட்டும், இந்த
புற்றையும் நீ ஜெயித்து
புவியிலே வாழவேண்டும்,

அதுவ‌ரை,
இறை‌வ‌னின் பாதமே
என் ச‌ர‌ணாக‌தி,
உனக்கென ,
என்றென்றும் ச‌ம‌ர்ப்பிப்பேன்
என் க‌ண்ணீர்த்துளி!...

உயிர்வலி!

அன்பே,

மனசெல்லாம்
மழைச்சாரல்,
துளித்துளியாய்
உன் முகம்

நினைவெல்லாம்
உன் நாதம்,
இதயத்தில்
இன்னிசையாய்
உன் மெள‌னம்!

உருகிவிடவே
விரும்புகிறேன்
சுடராக
நீயிருக்க‌

உயிர்
உதிர்ந்துவிடவே
விரும்புகிறேன்,
நீயின்றி
வாழ்வை
நினைக்க!

வியாழன், 25 ஜூன், 2009

தோழி



வாடி நின்ற பொழுதுகளில்
வான் ம‌ழையாய் வந்த‌வ‌ளே


நாடி வரும் கங்கையென
நினைவுகளாய் நிறைந்தவளே
ந‌ட்பின் இலக்கணமே,
நேசத்தின் பிறப்பிடமே!

நட்பெனும் கடல் மூழ்கி,
நான் கண்ட நல்முத்தே

மனமெனும் சோலையிலே
மணம் வீசி மலர்ந்தவளே!

வளங்கள் பல நீ வாழ்வில் கண்டு
வாழிய வாழிய பல்லாண்டு!

செவ்வாய், 23 ஜூன், 2009

அன்னை தெரேசா!


மாத‌ர‌சியே

எங்கோ பிறந்தாய்
எங்கோ வ‌ள‌ர்ந்தாய்
புண்ணிய பூமியை
வந்தடைந்தாய்
புனிதர் என்னும்
புகழடைந்தாய்
எத‌த‌னை அழுகை
ம‌றைய‌ வைத்தாய்
எத்த‌னை புன்னகை
ம‌ல‌ர‌ வைத்தாய்!
ம‌னித‌ம் கொண்டு
ம‌ன‌தில் நின்றாய்
எத்த‌னை உயிர்களை
வாழ‌வைத்தாய் அவ‌ர‌து
எத்த‌னை துய‌ர்க‌ளை
தொலைய‌ வைத்தாய்
நிறமும் பேதமும்
மறந்து வந்து
ஜாதியும் ம‌த‌மும்
க‌டந்து வந்து
அன்பை உயிர்களில்
விதைத்தவரே, உம‌து
அன்பால் உல‌கில்
நிலைத்த‌வ‌ரே

திங்கள், 22 ஜூன், 2009

முதிர் கன்னி

கடந்தகால கன்னி
சிந்துகிறாள்
கண்ணீர்!

உறக்கமற்ற
கனவுகளின்
இர‌க்க‌ம‌ற்ற
நினைவுகளில்
நிதர்சனத்தை
நாடுகிறாள்

இழந்துபோன
இள‌மையை
அவள்
எங்கு சென்று
தேடுவாள்?

விடியல் த‌ரும்
சூரிய‌ன்
வாழ்வில்
வெளிச்ச‌ம்
த‌ர‌வில்லையே

வானில்
வ‌ள‌ரும்
நில‌வும்
இவ‌ள்
வ‌ருத்த‌ம்
போக்க‌வில்லையே
தேடி வ‌ரும்
தென்ற‌லும்
துணையை
காட்ட‌வில்லையே

இராம‌ன்
வாச‌ல்
வர‌‌வில்லை
இராவணனும்
வாழ்வில்
இல்லை

தனிமையே
துணையாக
வெறுமையே
வாழ்வாக‌
ம‌னிதம்
தொலைத்த
ம‌னித‌ர்களின்
மெளனங்களே
பரிசாக அவள்
வாழ்வில் ஏது
வசந்தங்கள்?

வெள்ளி, 19 ஜூன், 2009

தமிழர்!



அறிவில் சிறந்த அவ்வையே, இங்கு
அவசரமாகவே வரவேண்டும்,
அதியமான் தந்தார் நெல்லிக்கனி,
அதனால் நீண்டது நினது ஆயுள்,
எங்கள் தமிழரில் மூத்தோர்கள்,
ஐம்பதில் முடங்கி விடுகின்றார்,
நோய்கள் பலவும் உடல்கொன்டு,
என்பதில் விண்போய் சேர்கின்றார்!
எங்கள் தமிழின ஆண்மக்கள் -‍ சிலர்
என்றும் தவறுகள் பல புரிந்து,
காலன் வாய்க்கு இரையானால்,
எப்படி எங்கள் இனம் பெருகும்?
எங்கள் பெண்டீர் மட்டுமென்ன - சிலர்
படித்து பட்டம் பெற்றுவிட்டு,
திருமண பந்தத்தை மறுத்திருந்தால்!
எப்ப‌டி எங்க‌ள் இன‌ம் பெருகும்?
திரும‍ண‌ம் கொன்ட‌ தம்ப‌தியர், பிள்ளை
ஒன்று, இர‌ண்டு போதுமென்றால்
‍‍‍‍‍‍‍‍என்ன‌ சொல்ல‌, ஏது சொல்ல‌
என் இன‌ம் பெருக‌ ஏது வ‌ழி?
வாட்டம் தீர வேண்டும் தமிழர்
வாழ்வு ஓங்க வேண்டும்
நீடு வாழ்ந்த அவ்வையே, எமக்கு
நெல்லிக்கனியை தந்திடுவீர்.....

வியாழன், 18 ஜூன், 2009

தேவதை


கவிதை வரிகளை
பார்க்கிறேன்
ஒரு சொல் கவிதை
உன் பெயர்!

நகைகளில் தேடி
பார்க்கிறேன்
புதிதாய் பூத்த‌ ஒருநகை
உன் புன்னகை!

வைரம் ஒளிர்வதை
பார்க்கிறேன்
வசந்தம் விளைந்திடும்
உன் விழி

அழ‌கிய‌ பூவை
ப‌றிக்கிறேன்
அதிலே தெரிவது
உன் முகம்!

உன் காலடித்தடங்களை
சேர்க்கிறேன்
அதிலே தெரியுது
என் வழி

என்னில் உன்னைப்
பார்க்கிறேன்
உன்னில் தெரியுது
என் உயிர்!

புதன், 17 ஜூன், 2009

ஞாபகம்

ஞாபகம் இருக்கிறதா?
அன்பே,
ஞாபகம் இருக்கிறதா?

அன்றொரு சந்திப்பில்,
அறிமுகமானோம்
ஞாபகம் இருக்கிறதா?
இர‌ண்டாம் சந்திப்பில்,
ஏனோ பிடித்த‌து
ஞாப‌க‌ம் இருக்கிற‌தா?

தொடர்ந்த‌ சந்திப்பில்,
அன்பு ம‌ல‌ர்ந்த‌து
ஞாப‌க‌ம் இருக்கிற‌தா?
கால‌ம் க‌னிந்து,
திருமணம் ந‌ட‌ந்த‌து
ஞாப‌க‌ம் இருக்கிறதா?

புடவை‌யில் கண்டால்,
புன்ன‌‌கை புரிவாய்
ஞாபகம் இருக்கிறதா?
சுண்டு விர‌ல்ப‌ற்றி,
ந‌க‌ம் ஒடிப்பாயே
ஞாப‌க‌ம் இருக்கிற‌தா?

நீண்ட‌ முடியின்,
நுணி இழுப்பாயே
ஞாப‌க‌ம் இருக்கிற‌‌தா?
முறைத்தாலும் நீ,
முறுவ‌ல் செய்வாய்,
ஞா‌ப‌கம் இருக்கிறதா?

மழலைகள் பிறந்தனர்,
ம‌கிழ்ச்சியை விதைத்த‌ன‌ர்,
ஞாபகம் இருக்கிறதா?
இளமை களைந்து,
முதுமை முகிழ்ந்தது
ஞாபகம் இருக்கிறதா?

ஞாபகம் இருக்கிறது!
கண்ணே
ஞாபகம் இருக்கிறது!
இல்லறம் இணைந்து
இன்பத்தில் வாழ்வது
ஞாபகம் இருக்கிறது
இருகை கோர்த்து,
இதயத்தில் வாழ்வது
ஞாபகம் இருக்கிறது
இறுதிவரை நாம்
இணைந்திருப்போம்
எனும் நம்பிக்கை
இருக்கிறது!

சமர்ப்பணம் : அன்போடு (முதிர்)ந்த தம்பதிகளுக்கு

செவ்வாய், 16 ஜூன், 2009

"பட்டு"பூச்சி


பளபளவென வர்ணம்
ப‌டைத்த‌ பட்டாம்பூச்சியே, அழ‌கில்
ப‌ட‌ப‌ட‌க்கும் இர‌க்கை காட்டும்
க‌ண்ணாமூச்சியே

எட்டிப்பிடித்து தொட்டுப்பார்க்க
ஏங்குது உள்ளம்,
இருந்தும் வேண்டாம் என்று
இழுத்துப்பிடித்து த‌டுக்குது எண்ண‌ம்
வான‌வில்லின் வ‌ர்ண‌ம் காட்டும்
ப‌ருவ‌ ராணியே, உல‌கின்
வ‌ன‌ப்பையெல்லாம் த‌ன்னில் காட்டும்
ப‌க‌ல் ‌வின்மீனே

அழ‌கு இர‌க்கை ப‌ட‌ப‌ட‌க்க
தேடி வ‌ருகிறாய் நீ‍
அங்கு மலர்ந்த ம‌ல‌ரில் அம‌ர்ந்து,
தேனை அருந்துவாய்

முழுமையடையும் முன்னே நீ ஏன்
ம‌னித‌ன் க‌ண்ப‌ட்டாய் ?
பாவி க‌ம்ப‌ளிப்புழு உனை அழித்தே
ப‌ட்டு நெய்து விட்டான்!

க‌ம்ப‌ளிப்புழு என்றால் சித‌றி
க‌ன்னிய‌ர் ஓடுவார் - இருந்தும்
க‌ண்க‌வ‌ரும் ப‌ட்டாய் மாற‌
க‌ளித்து உடுத்துவார்!

என்ன‌ ஞாய‌ம்?
என்ன‌ நேய‌ம்?
ம‌னித‌ ம‌ன‌துக்கு,
ம‌ற்ற‌ உயிரை மாய்த்து
மினுக்கும்‌ட்டும் எத‌ற்கு?

திங்கள், 15 ஜூன், 2009

குழந்தை


ஆணிப்பொன் முத்து ஒன்று,
அன்னை த‌ன்னில் இட்டு வைத்த‌து,
ஐயிர‌ண்டு மாதம் சென்ற‌து,
அழ‌கான‌ சொத்தும் வந்த‌து,

குழந்தை என்னும் பெயரைக்கொன்டது,
குவியும் இன்பம் நூறு தந்தது,
பெற்றவர் எனும் பெயரைத்தந்தது
உற்றவர் வாழ்த்திட‌ வழியைத்தந்தது

புதிர்மொழி நீ பேசும்போது,
புவியும் கேட்குமே! உன்
பொக்கைவாய் சிரிக்கும்போது,
பூக்கள் மலருமே!

தத்தித்தத்தி நடக்கும் அழகில்,
அண்ணம் தோற்குமே! நீ
தாவி அணைத்துக்கொள்ளும் போது
தாய்மை பொங்குமே!

வண்ணசிட்டாய் புவியில் நீயும், வளர்ந்திட‌வேணும்,
அறிவுக்கூர்மையோடு, அகில‌ம் வென்று காட்டிட‌வேணும்
பெற்றவரை போற்றி நாளும் காத்திட வேணும் - நீ
மற்றவரும் மதிக்க மண்ணில் வாழ்ந்திட‌வேணும்!

ஞாயிறு, 14 ஜூன், 2009

மங்கை

அழ‌கு முகம் கொன்டவளே
எந்தன் கண்ணம்மா, உனை
அள்ளிக்கொள்ள‌ ஓடி வ‌ரும்
என்னை பார‌ம்மா!

சொத்து, சுக‌ம், வீடு, வாச‌ல்
சேர்ந்திட்ட‌ போதும், உன்
சொக்கும் விழிப்பார்வை ஒன்றே
சொர்க‌ம் காட்டுமே

அன்பு முக‌ம் காணும்‌போது,
அழ‌கு கூடுமே, உன்
பெரிய‌ விழி பார்வை முன்னே
பொன்னும் தோற்குமே

அச்ச‌ம், ம‌ட‌ம், நான‌ம் ப‌யிர்ப்பு,
அனைத்தும் கொன்ட‌வ‌ள்,
துன்ப‌ம் நேர்கையிலே
துணிவுகொன்டு வாழ்வை வெல்ப‌வ‌ள்!

பெண்குலமாய் பூமி வந்த‌‌‌
பேசும் சிற்பமே, உந்தன்
வருகையாலே வசந்தம் சேர்ந்து
வாழ்வு மலருமே!‌

சனி, 13 ஜூன், 2009

ஈழ‌ம்

ஈரம் இல்லா அரக்கர்களாலே,
ஈழ‌த்தில் கேட்குது ம‌ர‌ண‌ ஓல‌ம்
இரக்கம் இல்லா துரோகிகள்
இவர் இதயம் இல்லா பாவிகள்

புத்தன் வாழ்ந்த பூமியை
எத்தன் இன்று ஆளுகிறான்
பூமியில் ய‌ம‌னாய் மாறியே
போரால் உயிர்களை வாட்டுகிறான்,

நாளும் ஒரு கதை பேசியே,
நீசத்தனங்கள் புரிகின்றான்
க‌ண்ணீர் பெருகி வ‌ழியுது, ந‌ம்
க‌வ‌லை எல்லை மீறுது

உல‌க‌ம் கைக‌ட்டி சிரிக்குது,
உயிர்கள் துடிப்பதைக்கண்டு ரசிக்குது,
மனித நேயம் பேசுது,
மக்கள் மடிவதைக்கண்டும் நடிக்குது,

விடிவே இவர்கட்கு இல்லையோ,
வாழ்வில் விடிவெள்ளி என்பதும் இல்லையோ,
வாடி விடாதே என் இனமே, உன்
வாட்ட‌ம் தீரும் சீக்கிரமே

வெள்ளி, 12 ஜூன், 2009

தமிழ்


தேனினும் இனிய தமிழே,
தாய் மொழியாய் அமைந்த எழிலே,

முத்தமிழாய் நீ உலகளந்தாய்,
மண்ணில் மலர்ந்து மண‌‌ம் கமழ்ந்தாய்

செம்மொழி என்னும் சீர் கொண்டாய்,
சேரும் நன்மைகள் பல கண்டாய்,

வான்புகழ் வள்ளுவன் தனை ஈந்து,
வாழ்வுக்கு நல்வழி நீ தந்தாய்,

பார‌தியாரின் கவிதை வ‌ழி,
பெரும் புர‌ட்சிக்கு த‌ள‌மாய் நீ அமைந்தாய்,

என்னுயிர் மண்ணில் வாழும் வரை,
இன்னுயிர் த‌மிழே உனை ம‌ற‌வேன்,

நாடிடும் மேன்மைக‌ள் ப‌ல‌ க‌ண்டு,
நீ வாழிய வாழிய‌ ப‌ல்லாண்டு

இயற்கை


அழகே,
நீ நடந்த
பாதையிலே,
நறுமலர்களின்
நாட்டியங்கள்,
உன்
பாத‌ சுவ‌டு
பட்டு,
பூக்களுக்கும்,
புது வாச‌ம்,
உன்
செவ்விதழ்
சிந்திய‌தோ,
செந்தூரமாய்,
அந்தி வான‌ம்,
உன‌
சிரிப்பின்
சிதறலிலே
மணிமணியாய்
மழைத்துளிகள்

இயற்கை
எனும்
இனியவளே
உன்
இயக்கமன்றோ
இந்த புவி
இயக்கம்!

புதன், 10 ஜூன், 2009

பெற்றோர்

ஐயிரு திங்கள் வேண்டியிருந்தார்!
அங்கமெல்லாம் தாய் வாடியிருந்தார்!

தந்தை பிள்ளையை போற்றி வளர்த்தார்!
தன்னை மறந்து காத்து வளர்த்தார்!

ப‌ள்ளிக்கூட‌ம் அனுப்பி வைத்தார்!
ப‌ட்ட‌தாரியாய் ஆக்கி வைத்தார்!

நாடிடும் நலன்கள் அனைத்தும் த‌ந்தார்!
நானில‌ம் போற்றும் வாழ்வு த‌ந்தார்!

அன்பில் சிறந்த பெற்ற‌வ‌ர் போல்,
அவனியில் உண்டோ, தெரிந்தால் சொல்!

போற்றிடும் தெய்வம் பெற்றவரே!
அவர்க்கிணை இல்லை மற்றவரே!
பெற்றோரை ம‌ற‌ந்த‌வ‌ன் ம‌க‌ன‌ல்ல!
பூமியில் அவ‌ன்பேர் ம‌னித‌ன‌ல்ல‌!

திங்கள், 8 ஜூன், 2009

அன்பு












எரிமலையாய்
நானிருந்தும்‌,
பனித்துளியாய்
என்னுள்
நீ!

புய‌லாக
நானிருந்தும்‌,
பூவாக
என்னுள்
நீ!

பாலைவ‌ன‌மாய்
நானிருந்தும்‌,
ப‌ருவ‌ மழையாய்
என்னுள்
நீ!

என‌க்குள்
நானே
ம‌ரித்திருந்தேன்,
உன்னால்
தானே
உயிர்த்தெழுந்தேன்!

மீண்டும்
ஒருமுறை
பிற‌ந்து வ‌ந்தும்
நான்
உந்த‌ன்
க‌ர‌ம் ப‌ற்ற
காத்திருப்பேன்!

வெள்ளி, 5 ஜூன், 2009

தமிழ‌‌ன்
















வள்ளுவப் பெருந்தகை பிறந்து வந்தார்,
வாழ்க்கைப்பாடம் வரைந்து சென்றார்!

அருமை வள்ளலார் வந்திருந்து,
அன்பின் அகரம் விட்டுச் சென்றார்!

விவேகானந்தர் விரைந்து வந்தே,
விவேகத்தினை வளர்த்துச் சென்றார்!

அவ்வைப்பாட்டி அழகழகாய்,
அறத்தினை இங்கே கற்றுத்தந்தார்!

பகுத்தறிவுப் பகலவனாய்,
பாரினில் பெரியார் அவ‌த‌ரித்தார்!

அண்ண‌ல் காந்தி அடிக‌ளும்,
அகிம்சை பாட‌ம் ந‌ட‌த்திச்சென்றார்!

ஞால‌ம் அளித்த ஞானிய‌ரும்,
ஞான‌ம் என்ப‌தை உரைத்துச்சென்றார்!

வீரம் விளைந்த அர‌ச‌ர்க‌ளும்,
வெற்றியின் பெருமையை விட்டுச்சென்றார்!

இத்த‌னை இருந்தும் என்ன‌ ப‌ய‌ன் - என்
இன‌ம் ஏனோ திருந்த‌வில்லை‌!

ம‌னித‌ம் என்ப‌தை ம‌ற‌ந்துவிட்டார் - இவ‌ர்
மான‌த்தின் மான‌த்தை வாங்கிவிட்டார்!

ஆற்ற‌ல் மிக்க‌ பெரியோரே,
அவ‌னியில் ம‌றுப‌டி அவ‌த‌ரிப்பீர்!

த‌மிழ‌ர் தலை‌யினில் கொட்டு வைப்பீர் - அவ‌ர்
த‌ர‌ணியில் சிற‌ந்திட‌ கை கொடுப்பீர்.........

நிலா


ஒளிவீசும் சுடர் சூடி,
உலா வரும் நிலவு மங்கை,
நீல‌ வண்ண மேடையிலே,
நர்த்தனமாய் ஆகாய கங்கை,

மேகங்களை துணைக்கழைத்து,
மோகங்களில் முகம் நனைத்து,
நீல வண்ண ஆடையிலே,
கோடி மீன்க‌ள் சூழ‌ நின்றாள்,

நேசம் கொன்ட தன் துணையை,
நேரில் காண‌ ஏங்குகிறாள்,
துயில் மறந்து தேடுகிறாள் - அவள்
துக்கத்திலே வாடுகிறாள்,
க‌ல‌ங்காதே நிலாப்பெண்ணே - உன்
கணவன் வ‌ருவான் க‌ண் முன்னே,
அன்போடு மெய் சேர்வான் - அவன்
ஆசையோடு உனை அணைப்பான்,
வான‌தேவ‌ன் கைகோர்த்து,
வ‌ச‌ந்த‌ம் வீசும் வெண்ணிலவே,
வீதி வ‌ரும் உன் எழிலை,
வாச‌ல் நின்று காணுகிறேன் - போற்ற‌
வார்த்தையின்றி நாணுகிறேன்!

புதன், 3 ஜூன், 2009

இளைஞனே!

என் குல மறவனே!

நீ வீரத்தின் பிறப்பிடம்!
வெற்றியின் விளைநிலம்!
எந்தன் இனத்தின் கண் நீயே‍!
இச்சமுதாயத்தின் தூண் நீயே!

கட்டபொம்மன் வீரவாள்
நீ கொல்லும் அரிவாள் ஆனதும் ஏன்?
வாழப்பிறந்த என் இனமே
நீ ‍வீழ்வது விதியல்ல, உன் வினையே!

ஊட்டாமலேயே உயர்ந்தவர்கள்,
ஊருக்குள்ளே பலருண்டு,
ஊக்கத்தோடு செயல்பட்டால்,
உன்னை மிஞ்சிட ஆளேது?

கடமையுணர்வைக்கொன்டு நட!
கண்ணியம் கொன்டு சிறந்து நட!
க‌ல்வியைத்துணையாய் ஏற்றுக்கொள்!
கற்றவனாய் உனை மாற்றிக்கொள்!

எந்தத்தொழில் நீ புரிந்தாலும்,
அதிலே உயர்ந்திடும் வழிதேடு,
காலம் உனக்கு வழிகாட்டும்,
கவலை மறந்து நலம் சேரும்!

சமுதாயத்தை மறக்காதே
உன் பங்கை ஆற்றிட தவறாதே!
அனைவரும் இங்கே ஒன்றே,
நாடிடுமே நலம் நன்றே...


பி.கு: எங்கள் குல சிங்கங்களுக்கு இந்தக்கவிதை ஓர் விண்ணப்பம்!
அன்புடன்,
சிவனேசு





செவ்வாய், 2 ஜூன், 2009

பெண் !

பெண்ணே
புதுமைப்பெண்ணாய் பொங்கியெழு!
புதுயுகம் படைக்க விரைந்துவிடு!

தோல்வியைக்க‌ண்டு துவ‌ண்டுவிடாதே - அது
வெற்றிக்கு முத‌ல்ப‌டி ம‌ற‌ந்துவிடாதே!
சோத‌னை க‌ண்டு சோர்ந்துவிடாதே - அதை
சாத‌னையாக்கிட‌ த‌ய‌ங்கிவிடாதே!

அன்பில் சிறந்த கண்மணியே!
அறிவில் உயர்ந்த பொன்மணியே!
அழ‌கில் நீயே முழும‌தியே!
ஆளப்பிற‌ந்த வெகும‌தியே!
ம‌க‌ளாய் ம‌ண்ணில் நீ பிற‌ந்தாய்!
பெண்ணாய் பூமியில் வாழவந்தாய்!
துணையாய் ஆணுடன் சேர்ந்து நின்றாய்!
நீ தாயாய் தெய்வ‌த்தை மிஞ்சிவிட்டாய்!
உன் புக‌ழ் பாடிட‌ வ‌ரியேது ?
புவியில் நீயின்றி புக‌ழேது ?
வாழ்த்துகிறேன் உனை நான் இன்று!
வாழ்வில் வெற்றிக‌ள் ப‌ல‌ க‌ண்டு
வாழிய‌ நீயும் ப‌ல்லாண்டு!

பி.கு : இக்கவிதையை வாசிக்கும் அனை‌த்து பெ(க‌)ண்ம‌ணிக‌ளுக்கும்
இக்கவிதையை அர்ப்பணிக்கிறேன்.
அன்புடன்
சிவ‌னேசு